districts

காணாமல் போன குளம் அதிகாரிகள் அதிர்ச்சி

பூந்தமல்லி,மார்ச்.10- பூந்தமல்லி அருகே திரைப்பட பாணியில் குளத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்தி குளம் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் சிலர் இந்த குளத்தை மணலால் மூடி ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மூக்குத்தி குளத்தை காணவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரிடம் அகரம் மேல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் சா.மு. நாசர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, வட்டாரவளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் மூக்குத்தி குளம் இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது குளம் முழுவதும் மணல் நிரப்பி மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 ஜே.சி. பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குளத்தில் கொட்டப்பட்டு இருந்து மணலை அகற்றினர். மூக்குத்தி குளத்தை முழுமையாக தோண்டி, தூர்வாரி தண்ணீர் சேமிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.