districts

வேளச்சேரி விபத்து: மீட்புபணிகளை துரிதப்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, டிச. 5 -  வேளச்சேரி விபத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி - கிண்டி இணைப்பு சாலையான ஐந்து பர்லாங் சாலையில் அசோக் லேலண்டு கம்பெனி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக 50 அடி பள்ளம் தோண்டிருந்தது. அதனருகே ஆட்டோ கேஸ் நிரப்பும் மையம் செயல்பட்டு வந்தது. மிக்ஜாம் புயல் பெருமழை காரணமாக கேஸ் நிரப்பும் மையத்தின் ஒரு பகுதியும் பள்ளத்தில் சரிந்தது. கட்டுமான பணிக்காக கண்டெய்னர் வீட்டில் தங்கி இருந்தவர்களும் பள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்பு பணி குறித்த விவரங்களை பெற்றோர்கள், உறவினர்களுக்கு கூட அதிகாரிகள்  தெரிவிக்காமல் உள்ளனர். இந்த விபத்தில் 10லிருந்து 15 நபர்கள் சிக்கி இருக்கலாம் என மக்கள் தெரிவிக்கிறார்கள். விபத்து நிகழ்ந்த பகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்ட பிறகும்,  மீட்பு பணிகள் துரிதபடுத்தபடவில்லை. எனவே அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விதிகளை பின்பற்றாமல் 50 அடி பள்ளம் தோண்டிய நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.