சிதம்பரம், ஏப். 11- சிதம்பரம் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனை ஆதரித்து புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் பேசுகையில், ஒன்றிய அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், சிபிஐ கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளது. சம்பந்தபட்டதுறைஅதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி தேர்தலுக்குப் பிறகு திமுகஇருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்ன வென்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்து பாஜகவை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சி களையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளனர். மோடி தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதாரவிலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும். பிரதமர் மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது அப்படி சமூக நீதியின் மீது அக்கரையிருந்தால் இடஒதுக்கீட்டை அமல்படுத்திய விபிசிங் ஆட்சியை கவிழ்த்திருப்பார்களா? எனவே சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தொல் திரு மாவளவனுக்கு அனைவரும் பானை சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். சிபிஐ மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் மணி வாசகம், மாவட்டச்செயலாளர் துரை, மாவட்ட துணைச்செயலாளர் சேகர், வட்டச்செயலாளர் தமிம்முன்அன்சாரி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.