செங்கல்பட்டு,ஜூலை 19-
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் செவ்வாயன்று சாலவன் குப்பம் பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ‘புலிக்குகை’ வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்தால் அதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியருக்கும் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த முருகன் (39) என்பது தெரிந்தது.