சென்னை, டிச. 21- குப்பைகளுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்று டீக்கடை உரிமை யாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம், சென்னை பெருநகர டீக்கடை உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.அனந்தன், செயலாளர் இ.விஜயகுமார் (எ) சுந்தரம் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர். அந்த மனுவின் சுருக்கம் வரு மாறு: சிறு கடைகளுக்கு மாநகராட்சி சமீபகாலமாக பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதோடு, நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கி சிரமப்படுத்துகிறது. தொழில் உரிமங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படு வதுடன், குப்பை வரியும் வசூலிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை கடைகளில் இருந்து அகற்றுவதில்லை. எனவே, அவற்றை பொதுக்குப்பை தொட்டியில் கொட்டினால் ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். சொற்ப முதலீட்டில் நடைபெறும் டீக்கடைகளுக்கு அதிகப்படியான அபராதத் தொகை விதிப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் உரிமம் பெற வாடகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும், சொத்துவரி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும். தொழில் உரிமக் கட்டணங்கள் மற்றும் தொழில்வரியை பன்மடங்கு உயர்த்தியிருப்பது அடித்தட்டு சிறு குறு டீக்கடைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நியாயமற்ற இந்த கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.