கிராமப்புற பெண்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி
கிராமப்புற பெண்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வேலூர், பிப். 15- ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட்டின் அரவை ஆலையான அரக்கோணம் சிமெண்ட் ஒர்க்ஸ், நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 2,000 கிராமப்புறப் பெண்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி அளித்துள்ளது. ஆலைக்கு அருகில் அமைந்துள்ள கும்பினிப்பேட்டை, மேல்பாக்கம், தண்டலம், பரிதிபுத்தூர், சித்தேரி ஆகிய ஐந்து கிராமங்களைத் இந்நிறுவனம் தத்தெடுத்துள்ளது. இக்கிராமங்களில் உள்ள பெண்கள் திறனற்ற வேலை, கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். இந்த வேலை, பருவகாலம் சார்ந்தும் ஒழுங்கற்றதாகவும் இருந்ததால், நிதித் தேவைகளுக்கு பெண்கள் ஆண்களையே சார்ந்து இருந்தனர். சுயதொழில் மற்றும் உள்ளூர் ஜவுளி ஆலை களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆலையின் நிறுவன சமூகப் பொறுப்புக் குழு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி மையத்தை அமைத்து பெண்களுக்கு இலவசப் பயிற்சியைத் தொடங்கியது. இதுவரை சித்தேரி, தண்டலம், பரிதிபுத்தூர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 2,202 பெண்கள் பயிற்சி பெற்றுள்ள னர். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் போராட்டம் ஒன்றிய அரசை கண்டித்து இன்று பந்த்
புதுச்சேரி,பிப்.15- விவசாயிகள் தொழிலாளர்களுக்கு ஆதர வாக வெள்ளியன்று புதுச்சேரியில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடை பெறுகிறது. சிஐடியு,ஏஐடியுசி,ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் சேதுசெல்வம்,சீனுவாசன்,ஞானசேகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது- வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப் படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 26,000 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடு தழுவிய போராட்டம் பிப்.16 ல் நடைபெறுகிறது. பந்த்போராட்டம் நாடு தழுவிய போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் அனைத்து பகுதிகளி லும் கடந்த மூன்று நாட்களாக தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து விவசாய சங்கங்கள் சார்பில் கிராமப்புறபகுதிகளான பாகூர், திருக்கனூர்,வில்லியனூர் ஆகிய பகுதி களில் வெள்ளிக்கிழமை பந்த் போராட்டம் நடைபெறுகிறது. நகரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லித்தோப்பு மக்கள் தலைவர் சுப்பையா சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் நடை பெறும் இப்போராட்டத்தையொட்டி ஆட்டோக்கள்,பேருந்துகள், டெம்போக்கள் பிற்பகல் 1மணி வரை இயங்காது என்ற னர். மேலும் கடைகள் இயங்க அனு மதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
பெண்ணின் மேலாடையை இழுத்த தீட்சிதர் தலைமறைவு
சிதம்பரம், பிப். 15- சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த பெண் தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வந்தபோது நடராஜர் கோவில் தீட்சிதராக பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர் அந்த பெண்ணின் மேலாடை மீது கை வைத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவிலை சேர்ந்த தீட்சிதர் அதே தீட்சிதர் குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை பிப்.22 தொடங்குகிறது
புதுச்சேரி,பிப்.15- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப் 22 அன்று துவங்குகிறது. இதுகுறித்து, புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் ஆர். செல்வம் செய்தியாளர்களிடம் வியாழனன்று கூறிய தாவது: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப் 22ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட்டப்படுகிறது. அன்றைய தினத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதல்வர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்படும். பேரவை முன் வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். நாடாளுமன்றத்தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். இடைக்கால பட்ஜெட்தான் 2023-24ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 விழுக்காடு செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று பேரவைத்தலைவர் தெரிவித்தார். கூட்டத்தொடர் துவங்கும் அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி, 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.