வேலூர், ஏப்.24- வேலூர் விஐடியில் 18ம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாமை விஐடி துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வம் துவக்கி வைத்தார். முகாமை துவக்கி வைத்து பேசிய ஜி.வி. செல்வம், கொரோனா பெருந்தொற்று வந்தபோதுதான் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தோம். காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கல்வியை போல் உடல் ஆரோக்கியமும் நமது வாழ்க்கைக்கு மிக முக்கியம். உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் நாம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியோடு பலவற்றை சாதிக்க முடியும். தற்போது ஆன்லைனில் குழந்தைகள் விளையாடுகின்றனர் அதைவிட மைதானத்தில் விளையாடுவது தான் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. தெருக்களிலும், மைதானத்திலும் விளையாடும் சூழல் தற்போது மாறி உள்ளது. சதுரங்க அரங்கம் திறப்பு உடலும் மனமும் வலுப்பெற உடற்பயிற்சி, விளையாட்டு, யோகாசனம் ஆகியற்றை மாணவர்கள் அவசியம் மேற்கொள்ளவேண்டும் என்றார். மேலும் விஐடியில் சதுரங்க போட்டிக்கு என்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட சதுரங்க அரங்கத்தை திறந்து வைத்தார். கோடைக்கால இலவச விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம் 24ம் தேதி தொடங்கி மே 14 ம் தேதி வரை நடக்கிறது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து,கராத்தே, எறிபந்து, கையுந்துப்பந்து மற்றும் யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம்களில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் சேர எந்தவித கட்டணமும் கிடையாது. இம்முகாமில் சிறந்த பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். தினமும் பயிற்சி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்காக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஐடி உடற்கல்வி இயக்குநர் தியாகச் சந்தன் வரவேற்று பேசினார்.