திருவள்ளூர், ஜூன் 25- சர்வதேச யோகா தின விழாவில், 85 மாணவர்கள் தொடர்ந்து, 10 நிமிடங்கள் மச்சாசனம் எனும் யோகாசனம் செய்து நின்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா, 10 வது சர்வதேச யோகா தின விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு என முப்பெரும் விழா கொண்டாப்பட்டது. விழாவில், யோகா பயிற்சி மையத்தின் நிறுவனரும் பயிற்சியாளருமான சந்தியா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், டி.ஜெ.எஸ்., கல்வி குழும இயக்குநர் தமிழரசன் பங்கேற்றனர். வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்’ தீர்ப்பாளர் சிந்துஜா வினீத், செந்தமிழ் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் போது பயிற்சி மையத்தின் மாணவ, மாணவியர், 85 பேர், தொடர்ந்து, 10 நிமிடங்கள், மீன்நீந்துவது போன்ற மச்சாசனத்தில் இருந்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளருக்கு உலக சாதனைக்கான சான்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவியரின் யோகாசன கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா விழப்புணர்வு நிகழ்வுகள் நடந்தன. நிகழ்வின் முடிவில் சஞ்சனா நன்றி தெரிவித்தார்.