சென்னை, பிப். 16 - சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண கோரி வெள்ளியன்று (பிப்.16) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 விழுக்காட்டிற்கு மேல் அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தணிக்கை துறை ஆட்சேபனை காரணமாக 2017ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. இதனால் 2017 - 2021 வரை காலகட்டத்திற்கு 424 கோடி வரி செலுத்த சென்னை பல்கலைக் கழகத்திற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 37 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.மிருதுளா, “பல்கலை கழக நிர்வாகம் 80 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயமும் உள்ளது. கணக்குகள் முடக்கத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படு வார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு தலையிட வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் வே.அருண்குமார், கிளை நிர்வாகிகள் ம.அய்யனேஷ்வர், விக்னேஷ், கோகிலா, சம்யுக்தா ஆகியோர் பேசினர்.