சென்னை, ஆக. 10 -
அடிப்படை வசதி கோரி மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிபிடி) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தரமணியில் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் பழுதடைந்த சுவர் இடிந்து மார்ச் 1 அன்று 3 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், செய்முறை பயிற்சி கூடங்களை சீரமைக்க வேண்டும், கல்லூரியில் துறைக்கு ஒரு குடிநீர் தொட்டி வைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிப்பிடங்களை சுகாதார மாக பராமரிக்க வேண்டும், கேன்டினில் உட்காரும் வசதியை ஏற்படுத்த வேண்டும், விடுதியில் தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் சீனிவாசனிடம் மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதன் மீது நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், மார்ச் 25 அன்று மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது மாணவர்களிடம் பேசிய முதல்வர், குடிநீர் சுத்திகரிப்பு (ஆர்ஓ பிளாண்ட்) எந்திரம் உடனடியாக பொருத்தப்படும். கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
இந்த நிலையில் 4 மாதங்கள் கடந்தும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வில்லை. இதனால் வியாழனன்று (ஆக.10) கல்லூரி வாயிலில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதனால் வகுப்பறைகளை பூட்டி மாணவர்களை ஆசிரியர்கள் அடைத்து வைத்தனர். அதை யும் மீறி கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் வேறு வழியில்லாமல், கல்லூரி முதல்வர், மாணவர் சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் ரா.பாரதி, செயற்குழு உறுப்பினர் அமர், சுவேதா, மாவட்டக்குழு உறுப்பினர் சாய், வினோத் உள்ளிட்டோரு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து துறைகளிலும் குடிநீர் வழங்கப் படும். கட்டமைப்பு பணிகள் ஆக. 20ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என உறுதி யளித்தார். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.