districts

அமித்ஷா பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

சென்னை,ஏப்.9- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு வைகோ, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பாஜக அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஒருநாடு, ஒரு மதம், ஒரு மொழி என்ற சங்பரிவாரக் கொள்கையை ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே பேச்சு அமைந்துள்ளது. மீண்டும் இந்தி மொழித் திணிப்பு முயற்சி நடக்கும் எனில் தமிழகத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.