districts

img

வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் துவங்க வேண்டும்:

வேலூர், நவ. 15 - வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் துவங்க இணைஞர்கள் முன்வர வேண்டும் என்று இந்தியன் வங்கியின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கேட்டுக் கொண்டார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2022-2023ஆம் ஆண்டிற்கான மாணவர் மன்ற துவக்க விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது . இதில் இந்தியன் வங்கியின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கலந்துகொண்டு பேசுகையில், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் மூலம் தொழில் துவங்க முன் வரும் இளைஞர்களுக்கு இந்தியன் வங்கி அதிகளவில் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. எனவே படித்த இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் வங்கிகளின் நிதி உதவிகளை பெற்று தொழில் துவங்க முன்வர வேண்டும். இந்தியன் வங்கி மூலம் 80 முதல் 85 விழுக்காடு வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. குறிப்பாக வங்கிகள் மூலம் கடன் பெறுதல் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் செல்போன் செயலி மூலமே அதிகளவில் அளிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் மற்ற இணையதள பக்கங்களில் கிடைக்கும் அதிவேக இணையதள சேவை போன்று வங்கி சேவைகளையும் எதிர்பார்க்கின்றனர். இதனை பூர்த்தி செய்யும் வகையில் வருங்கால இளைஞர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார். இதில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், பதிவாளர் ெஜயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.