விழுப்புரம், ஜூன் 15-
18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சி.பழனி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாமிற்கு ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கி பேசுகையில், “இந்த முகாமில் கலந்து கொள்ள 18 வயதிற்குட்பட்ட 167 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்தோம். 154 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் தகுதியானோர் கண்டறிந்து வயது தளர்வு குழு ஒப்புதல் பெயரில் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாற்றுத்திறனாளிகளின் சமூகத்தில் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு வழிவகை ஏற்படும்”என்றார்.
முகாமில், தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மருத்துவர்கள் மரு.சுரேஷ்குமார், உதயச்சந்திரன், சரவணன், சுதாகரன், உமாராணி, லலிதா செழியன், பாலமுருகன், பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.