வேலூர், டிச.19- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவருக்கான இறகு பந்து போட்டி 19ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி,“வாழ்க்கையில் வெற்றி பெற சரியான முன்மாதிரியான அவர்கள் (ரோல் மாடல்) இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்”என்றார். விளையாட்டு பல முன் மாதிரியானவர்கள் நமக்குத் தந்துள்ளது. அதேபோல் வாழ்க்கையில் பல பாடங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த விழாவுக்கு தலைமை ஏற்ற விஐடி துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம், பேசுகையில் “பணத்தைவிட நமக்கு மிக முக்கியமானது நம் உடல் நலம் தான் கல்வியைப் போல விளையாட்டுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார். இந்த போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 118 குழுக்களில் இருந்து 820 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். துவக்க விழாவில் விஐடி துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், விளையாட்டு துறை இயக்குனர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.