கடலூர்,டிச.28- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பழனி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடலூர் சங்கர், விருத்தாசலம் துரைபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.