districts

img

விவசாயிகள்-தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்காக புதுச்சேரியில் கடையடைப்பு-மறியல்

புதுச்சேரி, பிப்.16- விவசாயிகள்-தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி புதுச்சேரியில் கடையடைப்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்ற  வேண்டும். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு, அமைப்பு சாரா தொழி லாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் ப்ரீ பெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். ரேசன் கடைகளை திறந்து அனைத்து அத்தியா வசிய பொருட்கள் வழங்க வேண்டும். அரசு சார்பு ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். மூடிக்கிடக்கும் அரசு தன்னாட்சி நிறுவனங்களை திறக்க வேண்டும் என்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. பாஸ்போர்ட் அலுவலகம் புதுச்சேரி மறைமலை அடிகல் சாலையில் உள்ள ஒன்றிய பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.16) நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட  மத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர்கள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, சீனுவாசன், பிரபுராஜ், ஞானசேகரன், புருஷோத்தமன், சிவக்குமார், செந்தில், வேதா வேணு கோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் காவல்துறையினர்  தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். முழு அடைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடை பெற்ற நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி கிராமப்புற பகுதிகளான பாகூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, வில்லியனூர், நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 மதகடிப்பட்டு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சங்கர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி விநாயகம், சிஐடியு நிர்வாகி மணி பாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பாகூர் பாகூர் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு,ஏஐடியுசி மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள்  கலியன், பத்மநாபன், ராமசாமி, ஹரிதாஸ், முருகையன், ராமமூர்த்தி, கீதா நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாகூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காரைக்கால் காரைக்கால் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், செயலாளர் தமிழ்ச்செல்வன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தமீம், பழனிவேல், சிஐடியு நிர்வாகிகள் பிரேம்குமார், பிரகாஷ் உட்பட திரளானோர் ரயில்வே கிராஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். புதுச்சேரி நகரத்தில் மறியலும் பாகூர், வில்லியனூர், திருக்கனூர் கிராமப்புற பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.