districts

img

வெள்ளத்தில் தெப்பமாக மாறிய அரசு செய்யூர் மருத்துவமனை!

செங்கல்பட்டு, ஜன.8- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், செய்யூர் வட்டார அரசு மருத்துவமனை அருகே உள்ள குளம் நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீர் செல்வதற்காக, மருத்துவமனை அருகே கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. ஆனால், கால்வாயில் அளவுக்கு அதிகமான உபரிநீர் வெளியேறி வருவதால் மருத்துவமனை வளாகம் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதில், சிகிச்சைக்கு  உள் நோயாளிகள் தங்கவைக்கப்படும் அறைகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், மருத்துவமனையிலிருந்த நவீன உபகரணங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. வட்டார மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுற்றுப்புற கிராம பொதுமக்கள் மழைக்காலங்களில் வரும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், கால்வாயில் செல்லும் உபரிநீரின் அளவு குறைந்து, மழை வெள்ளம் வடிந்தால் மட்டுமே மீண்டும் மருத்துவமனையை பயன்படுத்தும் நிலை உள்ளதால், பொதுமக்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் தற்காலிக ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.