districts

img

விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

கடலூர், செப்.9- விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நட்டஈடு பெற்றுத்தரக் கோரி கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.  இருப்பினும் நட்டஈடு வழங்க வில்லை. இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பேருந்து, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.