districts

img

பராமரிப்பின்றி சீரழிந்து வரும் பட்டியலின மக்களின் குடியிருப்பு!

கிருஷ்ணகிரி,மார்ச்  6- சூளகிரி வட்டம்,  உத்தனப் பள்ளியில் கெலமங்கலம் செல்லும் சாலையில் கிராமத்தின் கடைசியில்  பட்டியல் இன மக்கள் வாழும் பகுதி உள்ளது.  இங்கு 24 ஆண்டு களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள் உட்பட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வேறு பல வகுப்பினருக்கும் சேர்த்து 60 க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளுக்கு பட்டாக்கள் தரப்பட வில்லை. பலமுறை இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதில் ஒரு சில வீடுகள் தவிர அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பே சிதிலமடைந்து குட்டிச் சுவர்களாகவும்,குடியிருக்க தகுதி யற்ற நிலையிலும் உள்ளது. வீடு களுக்குள் மேல்தளம் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போன்று கம்பிகள் தெரிகின்றன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வாய் பிளந்து நிற்கிறது. பெரும்பாலான  வீடுகளில் மின் இணைப்பு வயர் பழுதுபட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது.  பொத்தல் விழுந்த வீடுகளால் மழை பெய்யும் போதெல்லாம் ஒழுகுகிறது, எந்த நேரத்திலும் இடிந்து விடுமோ எனும் மரண பயத்தில் பலஇரவுகள் உறங்காமல் விழித்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் சிதிலமடைந்துள்ளன. கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாத தால் தெருவெல்லாம்  சாக்கடை ஓடையாக மாறி வருகிறது. இந்நிலையில் இரண்டு தலைமுறையாக 26 தலித் குடும்பத்தைச்சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் பட்டா கேட்டுபோராடி வருகின்றனர்.  மேலும் வீடில்லாமல் இட நெருக்கடியில் வாழும் இளம் தலைமுறை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகள், தொகுப்பு வீடுகள் வழங்கவும், கழிவு நீர் கால்வாய் அமைத்து தரவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் பட்டியலின மக்கள் மனு அளித்தனர். வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.