திருவள்ளூர், அக் 30- தமிழ்நாடு அரசு கொடுத்த இலவச வீட்டு மனை இடத்தில் அலைக்கழிக்கபடும் ஆதிதிராவிடர் மக்கள் 4 வது முறையாக கொட்டகை அமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து மாற்று சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகே உள்ள எல்லாபுரம் ஒன்றியம் லச்சிவாக்கம் கிராமத்தில் 127 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீட்டு மனை இல்லாததால் அரசிடம் பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர். பல கட்ட போராட்டங்களுக்கு பின் 43 குடும்பங்களுக்கு ஊத்துக்கோட்டை வருவாய்த்துறையினர் மூலம் கிராமத்தில் உள்ள தோப்பு புறம்போக்கு இடத்தில் சர்வே நம்பர் 146/3 என்ற இடத்தில் 2.35.5 (சுமார் 5.80 ஹெக்கரில் ) ஹெக்டரில், 43 நபர்களுக்கு தலா 3440 சதுர மீட்டர் நிலத்தை மட்டும் கிராம நத்தமாக மாற்றி அரசு விதிகளுக்கு உட்பட்டு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் மற்றும் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர். அரசு பட்டா வழங்கிய இடத்தில் கடந்த 7 மாதங்களாக வீடு கட்ட முடியாமல் கூரை கொட்டகைகள் போட்ட நிலையில் மாற்று சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்திற்கு சென்றதை காரணம் காட்டி காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி ஆதிதிராவிடர் மக்கள் கட்டிய கொட்டகைகளை அகற்றினர். இந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் எதிர் தரப்பு தொடுத்த வழக்கு விசாரணைக்கு பின் அரசு தரப்பில் வழங்கிய இடம் அவர்களுக்கே உரியது என நீதிமன்றம் கூறியதை அடுத்து தற்போது நான்காவது முறையாக அரசு ஒதுக்கிய இடத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த வர்கள் கொட்டகை கட்டி அங்கேயே சமைத்து குடும்பத்துடன் வாழத்துவங்கினர். இந்த நிலையில் அப்பகுதியில் யாரும் வசிக்கக் கூடாது என மீண்டும் எதிர் தரப்பினர் மீண்டும் பிரச்சனை எழுப்புவதால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அந்த தரப்பினரை அழைத்து பேசினர். இதனை தொடர்ந்து திங்களன்று சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசியதை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 43 குடும்பங்களும் தங்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கி பட்டா கொடுத்துள்ள அந்த இடத்தில் எப்படியும் வசித்தே தீருவோம் என களத்தில் இறங்கி யுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.