districts

img

காவிரி படுகையின் செங்கொடி புதல்வன்: தோழர் என்.ஆர்.ஆர்

அது 1998. சரியாக கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் கடலூர் நகரின் மையத்தில் ஓடும் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அவர்தான் கட்சியின் மாவட்ட செயலாளர். இந்திய மாணவர் சங்கத்தின் ஊழியராய் பணியாற்றிய என்னை போன்ற மாணவர்கள் கடலூர் சென்றால் தங்கும் இடம் அந்த அலு வலகம்தான். கதராடை உடுத்தி, நறை நிறைந்த தலையுடன், மீசை மழிக்கப்பட்ட முகத்துடன் எங்களை வரவேற்பார். அப்போதெல்லாம் அவர் குறித்த எந்த வரலாறும் எங்களுக்கு தெரியாது. மாணவர் சங்க பணிகள் முடிந்து அவரிடம் உணவுக்கு காசு கேட்டு நிற்போம். அவர் அலுவலகத்தில் உள்ள ஒரு தகர டிரங்கு பெட்டியை திறந்து நாணயங்களை எண்ணி கொடுப்பார்.  முணுமுணுத்துக்கொண்டே உணவருந்த செல்வோம். ஆனால் அதன் பின் என்.ஆர்.ராமசாமி என்ற அந்த மகத்தான மனிதர் குறித்து அறிய துவங்கியவுடம் ஆச்சரியங்கள் எங்களை ஆட்கொண்டது. இந்தியா விடுதலை பெறுவதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், ரெட்டியூரில் சிறு விவசாயியான ரங்கப்பன் -

துரையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1929 ஆம் ஆண்டு என்.ஆர்.ஆர் பிறந்தார். தன்னுடையை 20 வது வயதில், 1949 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடலூர் மாவட்ட ஸ்தாபக தலைவர்களில் அவரும் ஒருவர். அன்று முதல் தனது இறுதி மூச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியாராக பணியாற்றினார். 81 வது வயதில் அவர் மறைந்தார். மேலாடை இல்லாமல் வேட்டி துண்டு மட்டுமே அணிந்த எஸ்.நடராஜன் என்ற வள்ளலார்  பெரும் பக்தர் இவருக்கு முன் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். வள்ளலாரை நேசிப்பவர்கள் கம்யூனிஸ்டுகளாகதான் மாறுவார்கள். ஏனெனில் வள்ளலார் மானுட நேசன்.  அந்த எஸ்.என் தான் என்.ஆர்.ஆர் அவர்களை கட்சியில்பால் ஈர்த்தார். தோழர்கள் சி.கோவிந்தராஜன், டி.ஆர்.விஸ்வநாதன், கே.திருவேங்கடம், டி.ராஜாராமன், எஸ்.துரைராஜ் என செங்கொடி இயக்க முன்னோடிகள் அவருடன் பணியாற்றினர். இன்று கட்சியின் மாநில செயலாளராக உள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனும், முன்னா்ள் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணனும் இவருடன் பணியாற்றியவர்கள். இன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ள பா.ஜான்சிராணி, மாதர் சங்கத்தின் மாநில தலைவராக உள்ள எஸ்.வாலண்டீனா, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் இவர் காலத்தில் கட்சிக்கு வந்தவர்களே!    கடலூர் மாவட்ட காவிரி படுகையான சிதம்பரம் -

காட்டுமன்னார்குடி வட்டங்கள் முழுக்க முழுக்க தஞ்சையைப்போல விவ சாயத்தை சார்ந்த பகுதியாகும். கூலி போராட்டமும், குத்தகை விவசாயிகள் பிரச்சனையும் தொடர்ந்து வெடித்து நின்ற பகுதிகளாகும். குத்தகை விவ சாயிகள் கடுமையாக சுரண்டபட்ட சூழலில், 1953 ஆம் ஆண்டு பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்ட குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை குமராட்சியில் நடத்துவதில் என்.ஆர்.ஆர் முன்நின்றார். பல கிராமங்களுக்கு சென்று குத்தகை விவசாயிகளை திரட்டினார். வாகன வசதிகள் இல்லாத அந்தகாலத்தில் அவரை போன்றவர்கள்  கிராமங்கள் தோறும் பயணித்தது ஆச்சரியங்கள் நிறைந்த சாகச பயணமாகும். பல நேரம் இரவுகளில் லாரிகளில் பயணிப்பது இவரது  பழக்கமாகும்.    செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டத்தால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பெறப்பட்ட உரிமையான பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை, சிதம்பரம் காட்டுமன்னார்குடியில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் அமலாக்க வேண்டும் என்றும், குத்தகை மற்றும் வார சாகுபடிதாரர் பாதுகாப்பு சட்ட அமலாக்கம், கூலி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக  தென்னார்காடு மாவட்டத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். 12 ஆண்டு காலம் தென்னார்காடு மாவட்டத்தில் விவசாய சங்க தலைவராக பணியாற்றிய தோழர் என்.ஆர்.ஆர். விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் பல பத்தாண்டுகள் விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். 1976 முதல் 1989 வரை 13 ஆண்டுகள் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்ட கட்சியின் செயலாளராக பணி யாற்றி உள்ளார். இன்று புதுச்சேரி மாநிலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள். இத்தனை பெரிய நில பரப்பில் வாகன வசதியற்ற காலத்தில் அவர் பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு நடைப்பயணமாக சென்றார். செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டி வனம், உளுந்தூர்பேட்டை, காட்டு மன்னார்குடி, சிதம்பரம், விருதாசலம் பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதிலும் பெரும் பங்காற்றினார். கட்சியை கட்டு வதற்காக விருதாசலம் சென்றவர் அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார். பல நெருக்கடியாக காலகட்டத்தில் கட்சியை திறம்பட வழி நடத்தியவர். இன்று சிதம்பரம் நகரத்தில் கட்சி அலுவலகம் கம்பீரமாக நின்றிட முக்கிய காரண கர்த்தாக்களில் அவரும் ஒருவர். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கம் காத்தவர். இரண்டு ஆண்டு கள் சிறைதண்டனையும் அனுப வித்துள்ளார். நெருக்கடி நிலைகாலத்தில் இவர்தான் கட்சியின் மாவட்ட செயலாளர். தோழர் என்.ஆர்.ஆர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் இல்லை,  எனினும்  ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை தனது துயராக நினைத்து தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் முன்நின்றவர். ஏனெனில் அவர் ஒரு மார்க்சிஸ்ட்.  அவரது மூத்த மகன் ஜீவானந்தம் தமிழ்நாடு முற்போக்கு எழுந்தாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளராக  பணி யாற்றி வருகிறார்.

 அவரது இரண்டா வது மகன் சங்கரய்யா மார்க்சிஸ்ட் கட்சியின் விருதாசலம் நகர செய லாளராகவும் மாவட்டக்குழு உறுப்பின ராக செயல்பட்டவர். SFI, DYFI  அமைப்பின் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். தற்போது வழக்கறிஞர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர். இளைய மகன் ரவிராஜ் வடலூரில் உள்ள என்.சி.ஆர்.எல்  தொழிற்சாலையில் சிஐடியு சங்கத்தின் முக்கிய ஊழியராக பணியாற்றினார். கடைசி மகள் சுமதி கட்சி தோழரை திருமணம் செய்துள்ளார். இன்றுவரை அவரது குடும்பம் கட்சி குடும்பமாக பணியற்றி வருகிறது.   நகைச்சுவை உணர்வுடன் அணுகும் பாங்கும்,  இளம் தோழர்களிடன் அன்பாக பழகும் தன்மையும், இளை ஞர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் ஆர்வமும் மிக்கவர். அவர் சைவ உணவுகளை மட்டுமே உண்பார். ஆனால் கட்சி கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் தோழர்களுக்கு அவர்களது விருப்பப்படி அசைவ உணவுகளை ஏற்பாடு செய்வார். 1991 விழுப்புரத்தில்  விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது அவரது மனைவி மரணமடைந்தார். மாநாட்டு பணிகளை முடிந்து விடியற்காலை சென்று இறுதி பணிகளை மேற்கொண்டார்.  இன்று (அக்.30) அவரது நினைவு தினம். தோழர் என்.ஆர்.ஆர் போன்ற மகத்தான தலைவர்களின் வாழ்க்கையை இளைய தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருப்பது அவசிய தேவை. - எஸ்.ஜி.ரமேஷ்பாபு