ரூ. 3 கோடி மோசடி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கடலூர்,செப்.20- ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் 20 ஆயிரம் கிடைக்கும் 130 நபர்களிடம் ரூ. 3 கோடி ஏமாற்றப்பட்ட கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கடலூர் மாவட்டம், சித்திரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரெஜினா என்பவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து இரண்டு மடங்கு ஒரே வருடத்தில் கிடைக்கும் என கூறியுள்ளார். இவர் தன்னை அந்த நிறுவனத்தின் முகவர் என்று கூறிக்கொண்டு சித்திரைப் பேட்டையை சேர்ந்தவர்களிடம் ரூ.1 லட்சம் போடுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கிடைக்கும் என கூறி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. 130 பேரிடம் ரூ. 3 கோடிக்கும் அதிகமான பணத்தை வசூல் செய்து நிலையில் தற்போது அந்த ரெஜினா என்பவர் திடீரென மாயமாகி விட்டார். பணம் போட்டவர்கள் கேட்டபோது அந்த கம்பெனி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறியதுடன் தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரெஜினா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்திரை பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து புதனன்று (செப்.20) மனு அளித்தனர். 130 பேர் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் நிறுவனத்திலும் கேட்டால் அவர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் குடும்பத்தோடு கொன்று விடுவோம் என விரட்டுவதாகும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.