சென்னை, நவ. 29- எந்தவித காரணமும் கூறாமல் நகர விற்பனை குழு கூட்டத்தை திடீரென ரத்து செய்த ஆணையரின் நடவடிக்கைக்கு விற்பனை குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி நகர விற்பனை குழுவின் 2ஆவது கூட்டம் திங்களன்று (நவ. 27) மாலை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. கூட்டத்தின் பொருள் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. இதற்கு விற்பனைக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழில் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டு, செவ்வாயன்று (நவ. 28) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர விற்பனை குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அனைவருக்கும் தமிழில் கூட்டத்திற்கான பொருள் தமிழில் வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நகராட்சி ஆணையர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறிவிட்டு மறு தேதி கூட அறிவிக்காமல் சென்று விட்டார். இதுகுறித்து விற்பனைக் குழு உறுப்பி னர் பலராமன் கூறுகையில், மாதா மாதம் கூட்டத்தை கூட்டுவதில்லை. கூட்டத்தை கூட்ட சொல்லி கடிதம் அளித்து வலியுறுத்தினால் கூட்டத்தை கூட்டு கிறார்கள். கூட்டத்தில் சாலையோர வியா பாரிகள் விற்பனை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் விற்பனை செய்யக் கூடாத இடங்கள் குறித்தும், விடுபட்ட மற்றும் புதிய சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, விற்பனை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்தும் பேச வேண்டியிருந்தது. மேலும் எடுத்த முடிவுகள் குறித்து 30ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். கூட்டத்தில் விற்பனைக் குழு உறுப்பினர்கள் 10 பேர், அதிகாரிகள் 5 பேர் கலந்து கொண்டனர். ஆனால் எந்த காரணத்தையும் கூறாமல் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறிவிட்டு சென்று விட்டார். எந்த விவாதமும் நடத்தாமல் கூட்டத்தை ரத்து செய்தால் வியாபாரிகள் பிரச்சனைகள் குறித்து எப்படி, எங்கே பேசுவது என கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பே பெரம்பூர், வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட 17 இடங்களில் அதிகாரிகள் கடை களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விற்பனை குழு கூட்டத்தை மாதாமாதம் கூட்ட வேண்டும். அங்கு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும் என்றார்.