கள்ளக்குறிச்சி, செப்.30- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் பல ஆண்டு காலமாக தலித் மக்கள் பயன்படுத்தி வந்த வழியை மறித்து தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளனர். இந்த சுவரை தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் அகற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தது. அதன்படி, செப்.30 அன்று மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று தீண்டாமைச் சுவரை அகற்ற முயன்றனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்டமாக அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு தலித் மக்கள் தற்காலிகமாக சென்று வர சிறிய அளவில் பாதை அமைத்துக் கொடுத்தனர். மேலும், மீதமுள்ள இடத்தை அகற்றுவதற்கு அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுத்தனர். அரசுக்கு சொந்தமான இடத்தை முழுமையாக கண்டறிந்து இடத்தை ஒரு வார காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர். முன்னணி மாவட்டத் தலைவர் வி.ராஜா, செயலாளர் வே.ஏழுமலை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன் எம்.கே.பழனி, இ.அலமேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் கே.ராமசாமி நிர்வாக குழு உறுப்பினர் கஜேந்திரன், விசிக மாவட்டச் செயலாளர் இரா.மதியழகன், மாநில நிர்வாகி பாசறை பாலு, தந்தை பெரியார் பொதுவுடமை கட்சி மாவட்டச் செயலாளர் பிரபு, போராட்ட குழுவின் தலைவர் எம்.பி.மன்னன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுமதி கோவிந்தன், ஊர் முக்கியஸ்தர்கள் . ஆர்.அய்யாவு, சீனு பாஞ்சாலை, சிவாஜி உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.