திருவண்ணாமலை, ஜன.27- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி, சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7321 மி.க.அடியாகும். திங்களன்று காலை சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 118.75 அடி மற்றும் முழு கொள்ளளவு 7264 மி.க. அடி யாகும். அதன்படி, திங்களன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனங்களுக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், சாத்தனூர் அணையிலிருந்து வருடந் தோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார். சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119 அடியாகும். கடந்த ஆண்டில் பெய்த தொடர் கனமழையின் விளைவாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையின் விளை வாகவும் சாத்தனூர் அணையின் முழு கொள்ளவு நிரம்பி, 1லட்சத்து 68 ஆயிரம் கன.அடி தண்ணீர் திறக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார். ஜன.27 முதல் 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்களும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 119 கிராமங்கள் சாத்த னூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்திக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. நீர்மேலாண்மைத்துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் நிலத்தடி நீரை சீராக பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் உற்பத்திக்கு தேவையான தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்கும் இந்த ஆட்சி பல்வேறு வகையில் விவசாய பெருங்குடி மக்களுக்கு உதவியாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.