திருவண்ணாமலை, ஏப்.29- திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி காமராஜ் நகர் வழியாக செல்லும் பழங்கால குதிரை ஓடையை, அப்பகுதியினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு அமைத்ததை கண்டித்து, பொது மக்கள் செங்கம் - குப்பநத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குதிரை ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைக் காலங்களில் முறையாக தண்ணீர் செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில், மக்கள் சிறைபிடித்த வாகனங்களை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர்.