திருவள்ளூர், டிச.3- வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று (டிச 3) திருவள்ளூர் மாவட்டம், புழல் நீர்த்தேக்கத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனமழையால் புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியில் இருந்து 400கன அடிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. தற்போது புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். தற்போது ஏரியில் 20.31 அடிக்கு நீர் உள்ளது. இந்நிலையில் அந்நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்து, கொள்ளளவு, நீர் வெளியேற்றம், கரைகளின் உறுதித் தன்மை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய்த்துறை அரசு செயலர் வி.ராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜ்குமார், பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், நாரவாரிகுப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், செயல் அலுவலர் பாஸ்கர், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.