திருவண்ணாமலை, நவ.6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளையின் சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் அறிமுகம், களம் 23 நிகழ்வு இரா.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் மா.கௌதம் முத்து வரவேற்றார். இணைச் செயலாளர் கவிஞர் பி.மாலவன் எழுதிய ‘துளி’ ஹைக்கூ தொகுப்பு நூலை மாவட்டத் தலைவர் நா. முத்து வேலன் வெளியிட்டு பேசினார். நூலை பெரணமல்லூர் சேகரன் பெற்றுக் கொண்டார். ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரையும் கவிஞர் பி.மாலவன் ஏற்புரையும் நிகழ்த்தினர். பெரணமல்லூர் சேகரன் எழுதிய விடுதலைப் போராட்ட வீரர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் போன்றோர் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 370 கட்டுரைகளை உள்ளடக்கிய நூலான “காலத்தை வென்ற வர்கள்”கட்டுரைத் தொகுப்பை நூல் அறிமுகம் செய்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் ச.பாரி உரையாற்றினார். அவரது இன்னொரு நூலான ஊருக்கும் சேரிக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளும் தீர்வும் கொண்டதான “வன்ம மேகம் கலையும் போது” என்னும் நாவலை ஒரு திரைப்படம் போல விவரித்தார் கவிஞர் பூங்குயில் சிவக்குமார். நிறைவாக ஏற்புரை வழங்கினார் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன். கிளை பொருளாளர் ப.தேவதாஸ் நன்றி கூறினார்.