districts

img

போதுமான தளவாடங்களை வழங்குக மின் பொது கட்டுமான திட்ட மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூலை 23- மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பொது கட்டுமான திட்ட மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை பொது கட்டுமான திட்ட 5ஆவது மாநாடு பெரம்பூரில் சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. தலைவர் ஆர்.பாலு தலைமை தாங்கினார். சங்கக் கொடியை பி.ஏழுமலை ஏற்றினார். இணைச் செயலாளர் எம்.முருகதாஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலா ளர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். திட்டச் செயலாளர் எம்.முத்து செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் வி.ரமேஷ்பாபு வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கி ணைப்பாளர் எம்.தனலட்சுமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் வடக்கு மண்டலச்  செயலாளர் ஆர்.ரவிக்குமார், சென்னை வடக்கு கிளை செயலாளர் ஜி.சத்யமூர்த்தி, மத்திய சென்னை கிளைச் செயலாளர் எஸ்.கண்ணன், மேற்கு கிளைச் செயலாளர் எஸ்.தசரதன், பவர் இன்ஜினியரிங் அசோசி யேஷன் பொது கட்டுமான கிளைச் செயலா ளர் எஸ்.இளங்கோவன், டி.மோகன், சி.கேசவன் (ஓய்வுபெற்றோர் நல அமைப்பு) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.தயாளன் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணைச் செயலாளர் சி.சம்பத் வரவேற்றார்.  இணைச் செயலாளர் இ.வெங்கடேசன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தரமான தளவாடப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும், மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பாதையை  விலை கொடுத்து வாங்க வேண்டும், மின்  உற்பத்தியை துவங்கிட கட்டுமான  பணிகளை உடனே துவக்க வேண்டும்,  மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய துணை மின் நிலையங்களில் உரிய பணி யிடங்களை அனுமதிக்க வேண்டும், 1.12.2019  முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், பெரம்பூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஆர்.பாலு, செயலாளராக எம்.முத்து, பொருளாளராக சி.சம்பத் உள்ளிட்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.