வேலூர். மே 7 - வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளி பேருந்துகள் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுத்தப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி ஆய்வு செய்து கண்டறிந்தார். காட்பாடி தனியார் பள்ளி வளாகத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய வட்டங்களை சேர்ந்த 47 தனியார் பள்ளிகளில் இயக்கப்பட்டு வரும் 441 பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேருந்து ஓட்டுநர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் தங்களின் குழந்தைகளைப் போல பாவித்து வாகனங்களை மெதுவாகவும் சாலை விதிகளை பின்பற்றியும் பேருந்துகளை இயக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்டிப்பாக முதலுதவி பெட்டிகள் வைத்திருக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்கள் பேருந்து விட்டு கீழே இறங்கிய பின்பு அவர்கள் பத்திரமாக சென்றார்களா என்பதை கவனித்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.க.கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், காட்பாடி வட்டாட்சியர் சரவணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ் கண்ணா, சிவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு உட்பட பலர் உடன் இருந்தனர்.