கடலூர், பிப். 5- காடாம்புலியூர் பகுதியில் முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து உண்மையான பயனாளிகளுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை யில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில், காடாம்புலியூர் காந்தி நகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கடலூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 75 பயனாளிகளுக்கு 4.15 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை உண்மையான பயனாளிகளுக்கு வழங்காமல் முறைகேடாக பட்டா ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் என வசூல் செய்து சொந்த வீடு மற்றும் நிலம் உள்ளவர்கள், அரசு துறையில் பணிபுரிபவர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாகவும், முறை கேடாகவும் வழங்கியுள்ள அனைத்து வீட்டுமனை பட்டாக்களையும் ரத்து செய்து உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து இலவச மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.