சென்னை, நவ, 9- உலக நீரிழிவு தினத்தை (நவ.14) முன்னிட்டு டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நீரிழிவு கல்லீரல் கிளினிக் தொடங்கவுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில், நீரிழிவு மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் இரண்டுக்கும் இடையே பெரிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குளுக்கோஸை சேமித்து வைக்கும் களஞ்சியமாக செயல்படும் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் ஃபேட்டி லிவர் (கொழுப்பு படிந்த கல்லீரல்) போன்ற நோய் தற்போது கவனத்திற்கு வந்துள்ளது என்று மோகன்ஸ் நீரிழிவு மைய நிறுவனர் டாக்டர் மோகன் கூறினார். இந்த மையத்தின் ஆய்வின் படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் குறிப்பிட்ட அளவில் கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஹெபடிக் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்ற நிலைக்கு வழிவகுப்பதால், கல்லீரலில் இன்சுலின் செயல்பாடு குறைந்து அதிகப்படியான குளுக்கோஸ் வெளியீட்டிற்கு காரணமாகிறது. அதுவும் குறிப்பாக காலை உணவுக்கு முன்பு இந்த நிலையால் அதிக குளுக்கோஸ் வெளியாகிறது. இதுவே, கல்லீரல் கொழுப்பு மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் இரண்டுக்கும் இடையிலான தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று மையத்தின் நிர்வாக இயக்குநர், டாக்டர். ஆர்.எம். அஞ்சனா தெரிவித்தார். ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு 89391 10000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். அல்லது www.drmohans.com மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.