districts

img

வேலூரில் குப்பை லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

வேலூர், பிப்.22 - வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் அடுத்த மூலைக்கொல்லை பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வேலூர் மாநகராட்சி முழுவதும்  சேகரிக்கும் குப்பைகளை மூலைக்கொல்லை பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கொட்ட குப்பை லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதனை கண்ட பகுதி மக்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவிஆணையர் செல்வ பாலாஜி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மாநகராட்சி குப்பை வாகனங்களை திருப்பி கொண்டு சென்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். மக்களின் போராட்டத்தையடுத்து குப்பை எடுத்து வந்த வாகனங்களை திருப்பி எடுத்துச் சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.