சிதம்பரம், ஜன.3- சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியின் வழியாக நகாய் நிறுவனம் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை புறவழி சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் லால்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் (அணுகு) சாலையில் நகாய் நிறுவனத்தின் அலட்சியப் போக்கால் தினம் தினம் விபத்து மற்றும் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 13 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் 3 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குச்சென்றார். அப்போது, சாலையில் இருந்த கருங்கல்லில் வாகனம் ஏறியதால் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது லாரியில் சிக்கி சம்பவ இடத்திலே சிறுமி உயிரிழந்தார். தந்தை படுகாயமடைந்தார். மேம்பாலத்தின் கீழ் புறம் உள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் மாற்றுப்பாதை என்ற பெயரில் தினந்தோறும் மரணம் ஏற்படும் அவல நிலையை கண்டித்தும், உரிய பாதுகாப்புடன் முன்னறிவிப்பு பலகைகள் வைத்து சாலை பணியை துரிதமாக முடிக்க வலியுறுத்தியும் ஜன. 4 அன்று லால்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜன. 3 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர், நகாய் நிறுவனத்தின் துணை மேலாளர் வெங்கட்ராவ், சிதம்பரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், ஒப்பந்ததாரர் தரப்பில் உதவிப் பொது மேலாளர் லட்சுமி நாராயண ரெட்டி, காவல் உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், ரவி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், ஜாஹிர் உசேன், சதானந்தம், லால்புரம் கிளை செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லால்புரம் மேம்பாலம் அருகில் நெடுஞ்சாலைத் துறையின் சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும். சாலையின் பக்கவாட்டில் உள்ள ஜல்லி மற்றும் கற்களை வேலை முடிந்தவுடன் உடனடியாக அகற்றப்படும். சாலையின் பக்கவாட்டில் கான்கிரீட் கொண்டு பாதுகாப்பு செய்தல் மற்றும் சாலை வளைவுகளில் சாலையை அகலப்படுத்தப்படும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை பணிகளை விரைவாக முடிக்கப்படும். சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பாக தற்காலிக தடுப்பு சாதனங்கள் அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர். இதனை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.