வேலூர்,டிச.16- இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டன் அரசியாக நீண்ட காலம் ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியின் 50-வது ஆட்சியாண்டின் நினைவாக வேலூர் அண்ணா சாலையில் தெற்கு காவல் நிலையம் எதிரே பழமையான விக்டோரியா மகாராணி பொன்விழா நினைவு தூண் உள்ளது. வேலூர் மாநகராட்சி பராமரிப்பில் இருந்த இந்த நினைவு தூண் பராமரிப்பு பணியை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கவனித்து வந்தது. செயற்கை நீரூற்று, இரவில் மின்னொளி விளக்கு வெளிச்சம் என பார்க்கவே அழகாக இருந்த விக்டோரியா மகாராணி நூற்றாண்டு நினைவுத் தூண் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக செய்திகள் வெளி யானது. இதையடுத்து, விக்டோரியா நினைவுத் தூண் அருகில் விரைவில் மாநகராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பில் ‘செல்பி பாயின்ட்’ அமைக்க இருப்பதால் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விக்டோரியா மகாரா ணியின் நினைவுத்தூண் பராமரிப்பு பணியை ஏற்றிருந்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் விக்டோரியா நினைவு தூண் பகுதியில் படர்ந்திருந்த புதர்களை அகற்றியது. மேலும், நினைவுத் தூணில் வளர்ந்திருந்த செடிகளையும் அகற்றியது.