districts

சென்னை முக்கிய செய்திகள்

சொந்த கட்சி நிர்வாகியிடம் ரூ. 25 லட்சம் மோசடி
பாஜக நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

சென்னை,ஜன.10- சென்னை அடுத்த மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி 33. இவர் மணலி புதுநகரில் பாஜகவில் 16வது வட்ட மகளிர்  அணி பொருளாளராக இருந்து வந்துள்ளார்.  இவர் அம்பத்தூரில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வந்துள்ளார். வளர்மதிக்கு  வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பொன்  பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் வளர்மதியிடம் போரூரில் பியூட்டி  பார்லர் மற்றும் ஸ்பா கடை வைக்க கூறியதாக வும், அம்பத்தூர் மற்றும் போரூர் என இரண்டு கடைகளுக்கு உரிமம் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக பொன் பாஸ்கர் வளர்மதியிடம் ரூ. 25 லட்சம் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு அவரது நண்பர் அருண்குமார் பெயரில் ஒப்பந்தத்தை தயார் செய்துள்ளார். இதனையறிந்த வளர்மதி பொன் பாஸ்கரிடம் சென்று முறையிட்ட போது முன்னாள் பாஜக நிர்வாகி முத்துராஜ் மற்றும்  அவரது நண்பர்களான பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாஜக அரசு பிரிவு  தொடர்பு மாநில தலைவர் பாஸ்கரன் ஆகி யோர் வளர்மதியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளர்மதி பல்வேறு புகார்களை அளித்ததன் பேரில் திருவள்ளூர்  கிழக்கு மாவட்ட தலைவர் பதவியில் இருந்து  செந்தில்குமாரை பாஜக தலைமை நீக்கி யுள்ளது. சில நாட்களுக்கு பிறகு மீண்டும் செந்தில்குமாருக்கு மாவட்ட தலைவர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வளர்மதியிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால் வளர்மதி பொன் பாஸ்கரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது ஆத்திரமடைந்த பொன்  பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வளர்மதியை கொலை செய்வதாக  கூறி அச்சுறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகி றது. இதுகுறித்து வளர்மதி பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அண்மையில் வளர்மதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் பொன் பாஸ்கர், அரசு தொடர்பு தலைவர் பாஸ்கரன்,  மாவட்ட தலைவர் செந்தில்குமார், முத்து ராஜ் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பணம் ரூ. 25 லட்சத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் பாஜக  நிர்வாகிகள் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பொன்.பாஸ்கர், முத்துராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாநில  தலைவர் எம்.பாஸ்கரன், கார்த்திக் ராஜ், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் மீது அவதூறாக பேசுதல், மோசடி, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை என 4  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாணை 354 அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை

சென்னை,ஜன.10- பொங்கல் பரிசு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கலைஞரின் நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாடப் படும் என முதல்வர் அறிவித்த போது, கிடப்பில் போடப்பட்டுள்ள கலைஞரின் அரசாணை எண் 354 அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிடுவார் என மருத்துவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் கலைஞரின் ஆணைக்கு தடை போடப்பட்டுள்ளது என்பது தான் வருத்தமளிக்கிறது. எனவே, அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 அமல்படுத்தி தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் தனது கரங்களால் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மரு.எஸ். பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

நெல்லை, தூத்துக்குடிக்கு  2 சிறப்பு ரயில்கள்

சென்னை,ஜன.10- வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில்,  தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயில்  இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது. தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜன. 14,16 ஆம் தேதியும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து ஜன. 15,17 ஆம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கமாக தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வருகிறது. இதுதவிர, தாம்பரம் - திருநெல்வேலி இடையே வரும் 11, 13, 16-ம் தேதிகளில், திருநெல்வேலியிலிருந்து  தாம்பரம் இடையே ஜன. 12, 14, 17-ம் தேதிகளில் முன்பதிவு  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலி யில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வருகிறது.

சிறந்த உணவு நகரங்கள் சென்னைக்கு 65 இடம்

சென்னை,ஜன.10- ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக உணவு கள் உள்ளன. ஒவ்வொரு நகரங்களில் செய்யப்படும் தனித்துவமான சுவைகள் கொண்ட உணவு சமையல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.தெருவோர கடைகள் முதல் சின்ன சின்ன உணவகங்கள் வரை உள்ளூர் உணவுகள் கவர்ந்திழுக்கிறது.  வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அந்த  ஊர் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். உள்ளூர் உணவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனுபவமிக்க பயண ஆன்லைன் வழிகாட்டி நிறுவனம் ஒன்று சமீபத்தில் உலக அளவில் சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவில் மும்பை, ஹைதரா பாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ  ஆகிய 5 நகரங்கள் முதல் 100 இடங்களுக் கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  ஐதராபாத்தை பொறுத்தவரை பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும் இங்கு உள்ளூர் உணவுகளும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஹலீம், சிக்கன் 65, கபாப், சமோசா, பாயா மற்றும் நிஹாரி ஐதராபாத்தில் ரசிக்கக்கூடிய உணவுகளாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை 65-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் தயாராகும் இட்லி, தோசைக்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பணி யாரம், வடை, பஜ்ஜி பக்கோடா மற்றும் ஊத்தப்பம் போன்றவற்றையும் அதிக அள வில் ருசித்து சாப்பிடுகின்றனர். இதனால் சென்னை உலக அளவில் சிறந்த உணவு  நகரங்களுக்கான பட்டியலில் 65-வது  இடத்தில் உள்ளது. தற்போது சென்னை யில் சாப்பிடக்கூடிய தோசை உலக அளவில்  காலை உணவாக இடம் பெற்று வருகின்றன.

தொடர் மழை: வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

விழுப்புரம், ஜன.10- விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த வீடூர் அணையிலிருந்து தமிழ்நாடு பகுதியில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியில் (605 மில்லியன் கன அடி) கடந்த மாதம் 5 ஆம் தேதி 21 அடி (110.74 மில்லியன் கன அடி ) தண்ணீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 1505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 24.600 அடி (190.72 மில்லியன் கன அடி) உயர்ந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.