காஞ்சிபுரம், ஜன.21- காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24ஆவது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் ராஜாஜி காய்கறிச் சந்தையில் இருந்து மோட்டார் வைத்து இறைத்து தெருவில் விடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தொடர்ந்து இப்பிரச்சினை நீடித்து வருவதால் கொந்தளித்த மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கழிவு நீர் உறிஞ்சு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.