கள்ளக்குறிச்சி, டிச.16- ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 146 நபர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ளது மா.குன்னத்தூர் கிராமம். இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வந்த 146 நபர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாக்கள் இதுவரை கிராம கணக்கில் பதிவு செய்யப்படவில்லை. அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு கிளியூர் காலனியில் 9 நபர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப் பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்ட 142 நபர்களையும் அழைத்து சென்று வட்டாட்சி யரை சந்தித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பட்டாக்கள் கிராம கணக்கில் பதிவு செய்யப்படும் என்றும் கிளியூர் காலனியில் கிராம நத்தம் சர்வே எண்: 32 ல் குடியிருக்கும் மக்களுக்கும் பூவனூர் கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகன், மாவட்ட குழு எம்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன், குன்னத்தூர் கிளை செயலாளர்கள் பி.ஹரி, கே. சீனிவாசன், கே.ரங்கராயர், எஸ்.ராஜேந்திரன், ஏ.ஜெயந்தி, கே.கலைச்செல்வி, கே.கோவிந்தன், கே. ஏழுமலை உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.