districts

img

சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் ஒப்புதல்: போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை, ஜன.24 திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நல்லூர்   ஊராட்சியில். அரிசி ஆலை, சிறு வர்த்தக நிறுவனங்கள்,  கலைஞர் கருணாநிதி சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த ஒன்றிய சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சேற்றில் நடந்து செல்கின்றனர். வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலை இது என்பதால், இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பொது மக்களிடம் கையொழுத்து இயக்கம் நடத்தி,  வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு முறை மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இந்த நிலையில்  ஒன்றிய சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும், பாப்பா உமாநாத் முக்கிய சாலை மற்றும் குறுக்கு சாலைகளை சீரமைக்க வேண்டும், பாலமுருகன் நகரில் உள்ள இரண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (ஜன 24)  சோழவரம் பிடிஒ அலுவலகத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.நடேசன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ரமணி, கிளைச் செயலாளர்கள் பூங்கொடி, மகாலிங்கம், முனுசாமி, பார்த்திபன், வேலு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.