districts

img

திரையரங்கில் கொலைவெறி தாக்குதல்: அனைத்துக் கட்சிகள் ஆவேசப் போராட்டம்

சிதம்பரம், நவ. 24- சிதம்பரம் வடுகநாதன் திரையரங்கில் கடந்த 17 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் ஊழியர்களால் சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி, ராமராஜன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவியின் மண்டை உடைக்கப்பட்டு 9 தையல்கள் போடப்பட்டுள்ளது இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்காமல் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த செயலை கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து  விசாரணை நடத்த வேண்டியும், சம்பந்தப்பட்ட திரையரங்கு மேலாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்ய  வலியுறுத்தியும் சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, மாதர் சங்க தலைவர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர். தில்லை ஆர்.மக்கீன் (காங்.) வி.எம் சேகர் (சிபிஐ), ஆதிமூலம் (விசிக), பாலு (தேமுதிக), பால்ஸ் ரவிக்குமார் (பாமக), பூசி இளங்கோவன் (திக), ரஜினிகாந்த் (தமாக), சேரலாதன் (தவாக), முஹம்மது ஜக்கரியா( முஸ்லிம் லீக்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.