780 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னை, ஆக.19- சென்னை விமான நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளாகச் மலேசியா செல்ல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் வந்திருந்தனர். அவர்களின் பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்குள் ஏதோ லேசாக அசைந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே உயிருடன் 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், விசாரணை யில், சதுப்பு நிலப்பகுதியி லிருந்து நட்சத்திர ஆமைகளைப் பிடித்து மலேசியாவுக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.
மோட்டார் வாகன சங்க வேளச்சேரி பகுதி மாநாடு
சென்னை, ஆக. 19 - சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் வேளச்சேரி பகுதி 2ஆவது மாநாடு சனிக்கிழமையன்று தரமணியில் நடைபெற்றது. பகுதி தலைவர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன்,சங்கத்தின மாவட்டப் பொருளாளர் செந்தில், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதி தலைவராக கே. வனஜகுமாரி, செயலாளராக ஏ.எஸ்.அந்தோணி, பொருளாளராக எம்.எஸ்.பாபு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்படுத்தியவர் மீது போலீசில் புகார்
திருப்பெரும்புதூர், ஆக.19 – திருப்பெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கிராம பஞ்சாயத்து மூலம் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது அங்கு பதிக்கப்பட்டு இருந்த ஏஜி&பி பிரதம் நிறுவனத்திற்கு சொந்தமான 32 மி.மீ. விட்டம் கொண்ட இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்து வந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதை அரை மணி நேரத்தில் சரி செய்து அப்பகுதிக்கான எரிவாயு விநியோகத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு விநியோக நிறுவனத்திற்கு முன்கூட்டியே கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தகவல் தெரிவிக்கவேண்டும்.
தனியார் பல்கலைகழகங்களில் விஐடி அகில இந்திய அளவில் முதலிடம்
வேலூர், ஆக. 19 - உலகில் சிறந்த பல்கலைக்கழகத்தை தேர்வு செய்வதற்கான சாங்காய் அமைப்பின் கல்வி தரவரிசை பட்டியலில் இந்தியாவில் விஐடி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. உலகளவில் கல்வி தரவரிசை பட்டியலை சாங்காய் அமைப்பு வெளி யிட்டுள்ளது. கல்வி, ஆராய்ச்சி செயல்பாடு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நோபல் விருது பெற்றவர்கள், தலை சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த இதழில் வெளியிடுதல், சிறந்த ஆராய்ச்சிகள் வெளி வருதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சாங்காய் கல்வி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் உலகளவில் சிறந்த 1000 கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 2ம் இடம் பிடித்துள்ளது. அதே போல் தனியார் பல்கலைகழகங்களில் இந்தியளவில் விஐடி முதல் இடம் பிடித்துள்ளது. உலகளவில் உள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் (சாங்காய் ) விஐடி 501ல்லிருந்து 600 க்குள் இடம் பிடித்து இரண்டாம் இடமும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் உலகளவில் 401 முதல் 500 இடங்களுக்குள் பிடித்து இந்தியளவில் முதலிட்டும் பெற்றுள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் மட்டும் 15 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் கேட்கும் நில அளவையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி, ஆக. 19 - கள்ளக்குறிச்சியில் நில அளவை பிரிவில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் கேட்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டுமென விவ சாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்,தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தனது விவசாய நிலத்தை அளவீடு செய்வதற்காக வங்கியில் நில அளவீட்டிற்கான பணத்தை கட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்கான நில அளவையரை கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நேரில் சென்று பார்த்து பேசியுள்ளார். அப்போது அவர் உரிய கட்டணம் செலுத்திய பின்னரும் ஏன் எங்களை அலைகழிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நில அளவையர் இப்படி எல்லாம் நேராக வந்து அலுவலகத்தில் கேட்கக் கூடாது, வாருங்கள் வெளியே போய் பேசுவோம் எனக்கூறி வெளியே அழைத்து வந்தார். தொடர்ந்து விவசாயிடம் ஒரு சில நாட்களில் வருவதாகவும், அப்போது பேசிக் கொள்ளலாம் என சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட தலை நகரில் உள்ள அலுவலகத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதியில் நிலம் அளவீடு செய்யக்கோரும் விவசாயிகளின் நிலைமை என்னவாக இருக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நிலம் அளவீடு செய்ய மனு அளிப்பவர்களுக்கு உடனடியாக நிலம் அளவீடு செய்யவும், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் நில அளவையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வீடுகளை உடைத்து நகை கொள்ளை
அம்பத்தூர், ஆக. 19- பூந்தமல்லி அருகே மேப்பூர், சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(36). ஆட்டோ ஓட்டுநரான இவரது வீட்டு அருகில் சித்தி பரமேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று வெங்கடேசன், பரமேஸ்வரி குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு கோட்டூர்புரம் சென்றனர். இரண்டு குடும்பத்தினர் திங்கட்கிழமை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, வெங்கடேசன் வீட்டில் 8 சவரன் நகையும், பரமேஸ்வரி வீட்டில் 2 சவரன் நகையும் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.