districts

சவூதியில் இறந்தவர் குடும்பத்துக்கு அமைச்சர்கள் நிதியுதவி

கடலூர்,ஜூலை 15-

      சவுதி அரேபியால் இறந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

     கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3 ஆம் தேதி சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசைனிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23 ஆம் தேதி  உயிரிழந்தார்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி சவுதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.

   இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவன் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து.

   பின்னர், மங்கலம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெள்ளியன்று (ஜூலை 14) கொண்டுவரப்பட்டது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம்பேட்டைக்கு சென்று, இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.  பிறகு, இளங்கோவன் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர்.

   உயிரிழந்த இளங்கோவனுக்கு கவுரி என்கிற மனைவியும், காயத்ரி (21) என்கிற மகளும், ஜீவன் ராஜ் (12) என்கிற மகனும் உள்ளனர்.