districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி சேத்துப்பட்டில் தொடங்கியது

சென்னை, செப்.20- சென்னை மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்க நல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கிறது.  தற்போது சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரை 700 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஸ்டெர்லிங் சாலையை அடைவதற்கு முன்பு கூவம் ஆற்றின் அடிப்பகுதியில் 13 மீட்டர் நீளம் செல்கிறது.  சேத்துப்பட்டு-ஸ்டெர்லிங் சாலை இடையே சுரங்கப்பாதை பணி களை முடிக்க 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். இந்த பாதையில் 25 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை தோண்டும்போது 2 முறை மண் பரிசோதனை செய்யப்பட்டு நிலத்தின் தன்மை பரிசோதிக்கப்படுகிறது. மேலும் அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையே மற்றொரு வழித்தடத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வருகிறது.  இதில் காரம்பாக்கம்-வளசர வாக்கம் இடையே 600 மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நிலத்தடி உயர்மின் பாதை தடைபட்டுள்ளதால் போரூர்-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே பணியில் 6 மாதங்கள் தாமதம் ஏற்படும். இது 2025-ம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்ட 16 கி.மீ. தூரம் கொண்ட பவர்அவுஸ்-பூந்த மல்லி மெட்ரோ ரயில் பாதையின் ஒரு பகுதியாகும். இரட்டை அடுக்கு  உயர் மட்டபாதை  ஆழ்வார் திருநகரில் இருந்து ஆலப்பாக்கம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட பாதை உருவாக்கப்படுகிறது. இது 2-ம் கட்ட மெட்ரோ ரயிலின் 4 மற்றும் 5 ஆகிய வழித்தடங்களை இணைக்கும் பகுதியாகும். இங்கு கான்கிரீட் தூண்களை அமைக்க பெரிய கிரேன் களை பயன்படுத்த வேண்டியுள்ளது.  எனவே இந்த பகுதியில் கட்டுமானம் மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது. இந்த 4 கி.மீ. தூர பாதையானது நிலத்தடி குடிநீர் குழாய், நிலத்தடி உயர்மின் பாதைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது. மேலும் இந்த பாதையில் 3 இடங்களில் மின் கம்பி செல்கிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது என்பதால் இந்த திட்டப் பணிகளை முடிப்பதில் 6 மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூடுதல் விலைக்கு மதுபானம்  விற்ற 7 ஊழியர்கள் சிக்கினர்

சென்னை,செப்.20- டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது.  அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில் கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குநர் விசாகன் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.  டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது பணிநீக்க நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும்.

வீடு புகுந்த கொள்ளையனை கதவை பூட்டி பிடித்த பெண்

சென்னை,செப்.20- சென்னை வியாசர்பாடி சிவகாமி அம்மையார் காலனியை சேர்ந்தவர் ஜமுனா. இவரது வீட்டில் திங்களன்று  கொள்ளையன் ஒருவன் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடு பட்டான். அப்போது வெளி யில் சென்றிருந்த ஜமுனா வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் கொள்ளையன் இருப்பதை பார்த்ததும் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அக்கம்பக்கத்தி னரை திரட்டினார். பின்னர் இதுபற்றி எம்.கே.பி.நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீடு புகுந்து கொள்ளை யனை பிடித்து கைது செய்த னர். விசாரணையில் அவ னது பெயர் வசந்த் என்பது தெரிய வந்தது. புத்தி சாலித்தனமாக செயல்பட்டு திருடனை சிக்க வைத்த பெண்ணை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டி னர்.

விஷக்குளவி கொட்டி தொழிலாளி பலி

மாமல்லபுரம்,செப்.20- கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது50). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே உள்ள முட்புதரை சுத்தம் செய்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பனை மரத்தின் காய்ந்த ஓலை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்த விஷமுள்ள செங்குளவிகள் பறந்து வந்து மகாதேவன் மற்றும் அருகில் நின்ற பேரன்கள் லட்சன், திலக் ஆகியோரை கொட்டியது. இதில் அவர்கள் 3 பேரும் வலியால் அலறினர். மேலும் அவர்களது உடல்நிலையும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து மகாதேவன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தி னர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் உயிரிழந்தார். அவரது பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர். இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

சென்னை,செப்.20- சென்னை பெரும் பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ  படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி யுள்ளார்.  அதனை மறுக்கவே அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கி விட்டு ஓடிவிட்டார். குரோம் பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப் பட்டுள்ளார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

சிபிஎம் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி
அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


கடலூர், செப்.20- கடலூர் ஊராட்சி ஒன்றியம் சான்றோர் பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட சுத்துகுளம் ரயில்வே கேட்டில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்த கோரியும் சுத்து குளம் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (செப்.20) முதுநகரில்  மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் தலைமையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் முயற்சியால் கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ்,  மேயர்  சுந்தரி ராஜா மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.  அப்போது, சுத்துக்குளம் ரயில்வே கேட்டில் இருந்து பிரதான சாலை வரைக்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 தினங்களுக்குள் சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கொடுத்தனர். இந்த ஒப்பந்தத்தை அடுத்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், மூத்த தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கந்தசாமி, என்.அய்யாதுரை, பி.பாண்டியன், எம்.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.