செங்கல்பட்டு, பிப். 18- செங்கல்பட்டிலிருந்து மறைமலைநகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாமண்டூர், பழவேலி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் கழிவு இறைச்சிகளை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். ஆனால் அந்த கழிவுகளை உண்பதற்கு காகங்கள், நாய்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றி திருந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி சாலை விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடும் இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கின்றனர். இதனைத் தடுக்க அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம், காவல்துறையினரிடம் பல மனுக்கள் கொடுத்து எச்சரிக்கை பலகைகள் வைத்து எந்த ஒரு பலனும் இல்லாமல் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.