பண்ருட்டி, பிப். 7- பண்ருட்டியில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் பஞ்சாயத்து தலைவர் வாசுகி (40). இவர் தனது கணவர் துளசியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அங்கு வந்து, வாசுகியிடம் எனது வீட்டுக்கு அமைத்த குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என தெரிவித்துள்ளார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாளைக்கு தண்ணீர் வரும் என்று கூறியுள்ளார். அப்போது வாசுகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமசாமி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தடுக்க வந்த வாசுகி கணவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ராமசாமியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.