districts

img

கலைஞர் பொற்கிழி விருது பெறும் மயிலை பாலு, ஆ.சிவசுப்பிரமணியன்!

சென்னை, டிச. 29 - சிறந்த தமிழ் மொழியாக்கப் பணிக்காக, கலைஞர் பொற்கிழி விருதுக்கு தேர்வாகியுள்ள தமுஎகச மாநில துணைத் தலைவர் மயிலை பாலு, பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட  விருதாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : 2024-ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உரைநடை பிரிவில் ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன், நாவல் பிரிவில் எழுத்தாளர் தமிழ்மகன், சிறுகதை பிரிவில் எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிதை பிரிவில் கவிஞர் உமா மகேசுவரி, மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் மயிலை பாலு, நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் வேலு சரவணன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலை பாலு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தோழர் சா.மு. பாலசுப்பிரமணியன், தீக்கதிர் நாளேட்டின் சென்னை பதிப்பின் ஆசிரியர் வரை பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பங்காற்றி வந்துள்ளார். அவர் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ உள்ளிட்ட 8 நூல்களை தமிழில் கொடுத்துள்ளார். மொழியாக்கத்தில் தனிச் சிறப்பான கவனம் செலுத்திய அவரின் கட்டுரைகளும், எழுத்துக்களும் குறிப்பிடத்தக்கவை. பத்திரிக்கையாளர், செயற்பாட்டாளர், தமிழ் ஆர்வலர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் என பன்முகத் திறன் கொண்ட அவருக்கு கலைஞர் பொற்கிழி விருது மேலும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது. ஆ. சிவசுப்பிரமணியனுக்கு உரை நடை விருது: பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவராகவே தன்னை அறிவித்துக்கொண்ட ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ் ஆய்வுலகத்திற்கு மேற்கொண்டுள்ள பங்களிப்பு தனிச் சிறப்பானதாகும். அவருக்கும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்காக தேர்வாகியுள்ள அனைவருக்கும் சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இன்னும் பல்வேறு பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பாராட்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.