districts

img

மநு தர்மத்தை சட்டமாக்கத் துடிக்கும் பாஜகவை தோற்கடிப்போம்

கள்ளக்குறிச்சி, ஏப்.11 - விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து திருநாவலூர் கிழக்கு திமுக ஒன்றியம் சார்பில் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் ஜி.ஆர்.வசந்தவேல் தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்றது. மடப்பட்டு,செமனந்தல்,சேந்தநாடு, மட்டிகை, கூ. கள்ளக்குறிச்சி, மாம்பாக்கம், நாச்சியார் பேட்டை,வண்டிபாளையம், சேந்தமங்கலம் உட்பட 46 பஞ்சாயத்துகளில்    விசிக மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், எம்.வி.ஏழுமலை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் சேந்தநாடு பகுதியில் வேட்பாளர் துரை ரவிக்குமார் பேசுகையில், மோடி மீண்டும் வெற்றிபெற்றால் மநுதர்மத்தை சட்டமாக்கி இடஒதுக்கீடு,  அனைவருக்கும் சமமான கல்வி, ஓட்டுரிமை என எதுவும் இல்லாமல் அடிமைப்படுத்தப்படுவோம். ஜனநாயக நாட்டில் மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை பறிக்க நினைக்கும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என்றார். பிரச்சாரத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் பேசுகையில், இந்த முறை காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு நன்மை யளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் முன்னேற 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். அதேபோல தினசரி கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும். இது உங்களைப் போன்றவர்களின் வாழ்வை மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும். பெண்களுக்காக  அறிவித்துள்ள மகாலட்சுமி திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தாய்மார்கள் வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.