வேலூர், ஜூன் 12 -
குறவன் இன மக்கள் வீட்டை இடிக்க முயற்சி செய்த வட்டாட்சி யரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னையை அடுத்த குறவன் குடிசை பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை குறவர்கள் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1960-களில் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பட்டா வழங்கியதுடன் ஓட்டு வீடுகளும் கட்டித்தரப்பட்டது.
நிலமற்ற இந்த மக்ககள் பல ஆண்டுகாலமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது குடும்ப எண்ணிக்கை உயர்ந்த நிலையில் போதிய இட வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, அதே பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி வீடு கட்டித் தர வேண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கும், காட்பாடி வட்டாட்சியருக்கும், பல முறை மனுக்கள் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜூன் 8 அன்று ஈஸ்வரி என்பவர் வீட்டின் அருகில், அவரது அனுபவத்தில் இருந்த இடத்தில் மாட்டு கொட்டகையை காட்பாடி துணை வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் என 40 க்கும் மேற்பட்டோர் புல்டோசர் சகிதம் வந்து இடிக்க முயன்றுள்ளனர். அப்போது தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் சிலர் காயமடைந்தனர்.
காட்பாடி துணை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையின் அத்து மீறல், எதேச்சதிகாரப் போக்கை கண்டித்து காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையம் முன்பு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி.நதியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகாலிங்கம் துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, காட்பாடி வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப.சக்திவேல், செயலாளர் கே.சாமிநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.சரவணன் நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு காட்பாடி வட்டாட்சி யரை சந்தித்து வீடு இல்லாதவர்களுக்கு அதே பகுதியிலேயே பட்டா வழங்கி வீடு கட்டித்தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பிறகு வீடு இல்லாதவர்கள் பட்டியல் கொடுத்தால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.