சென்னை, நவ. 29 - கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் பயோ மைனிங் முறையில் சீரமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் செவ்வாயன்று (நவ.29) ரிப்பன் மாளிகை யில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 252 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கு 641 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான செலவில் 25 விழுக்காட்டை ஒன்றிய அரசும், 16 விழுக்காட்டை மாநில அரசும், 59 விழுக்காட்டை மாநகராட்சியும் பகிர்ந்து கொள்ளும். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 883 சதுர மீட்டர் தனியார் பட்டா நிலம் 61 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தப்படும். மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தனியார் இலவச வைஃபை சேவை வழங்க அனுமதி வழங்கு உள்ளிட்ட 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.