districts

img

மக்களுடன் ஒன்றாத ஒன்றிய அரசு எதற்கு?

சென்னை, ஏப். 6 - ஒன்றிய அரசு ஒன்றாத அரசாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், மத்தியசென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தங்கசாலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் கமல்ஹாசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஜனநாயகத்தின் அடையாளமாக தேசியக் கொடி பறக்க வேண்டும் என்பதற்காக இத்தனை (கூட்டணி கட்சி) கொடிகள் பறக்கின்றன.  குஜராத் மாடல் நன்றாக இருந்தி ருந்தால் ஏன் குஜராத், உ.பி., போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள். குஜராத் மாடல்தான் சிறப்பு என்ற பொய்க்கு நமது முதலமைச்சர் தாமரை மலரில் வளையம் வைத்து விட்டார். வறுமை, கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மை, சர்வாதிகாரத்தை  அடித்துதுவைக்க முதலமைச்சர் துணிந்திருக்கிறார். தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் தருகிறது. ஆனால் ஒருத்தர் ஒரே ஆளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை கொடுக்கிறார். டாடா, பிர்லாவுக்கே டாடா காட்டும் வகையில் எப்படி ஒருவரை 10 வருடத்தில் உலகப் பணக்காரராக மாற்ற முடிந்தது? அந்த மேஜிக்கை சென்னை தெருக்களில் காட்டுங்கள். தேர்தல் பத்திரம் என்ற பெயரில் உலகமகா ஊழல் செய்துள்ளனர். அமலாக்கத்துறையை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். ரூ.100 வருமானம் ஈட்டுகிற ஒரு நிறுவனத்தால் எப்படி  200 ரூபாய் நன்கொடை கொடுக்க முடியும். அப்படியெல்லாம் ஊழல் செய்துள்ளனர். விமர்சனம் செய்துவிட்டு எப்படி ஒன்று சேரலாம் என்று கேட்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். அதை செய்தார்கள். நான் சென்டரிஸ்ட். நல்லது என்றால் ஆதரிப்பேன். அதனால் ஆதரிக்கிறேன். அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட், சென்டரிஸ்ட் என எல்லா இஸ்ட்டுகளும் கான்ஸ்டிட்டியுசனை (அரசியல்சாசனத்தை) பாதுகாக்க கூடியிருக்கிறோம். நமக்கு விடிய இப்போது உதய சூரியன் தான் வாய்ப்பாக உள்ளது. எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து தா.பி.சத்திரம், சாலிகிராமம் ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

“ஒன்றிய அரசு தரும் 29 பைசாவில் இருந்து தான் ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து பயணம் கொடுக்கிறார்கள். இதை நாடு முழுவதும் அமல்படுத்தினால் உலகமே திரும்பி பார்க்கும். மீனவர்களுக்கு இடைஞ்சல் தந்ததை தவிர கடந்த 10 வருடத்தில் என்ன செய்தீர்கள்? இதற்கு முன்பு இல்லாத வகையில் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். படகுகள் ஏலம் விடப்படுகிறது. அதற்கும் நேருதான் காரணம் என்கிறார்கள். தன்னுடைய சொத்துக்களை நாட்டிற்கு எழுதி கொடுத்துவிட்டு, 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நேரு. ஆனால் இவர்கள் நமது சொத்தை ஒருத்தருக்கு எழுதிக் கொடுக்கிறார்கள்.”